Wednesday, April 16, 2014

எனது பார்வையில் இலங்கைத் தமிழர் பிரச்சனை.
                   நான் இலங்கைப் பிரச்சனையை நினைவு தெரிந்த நாளிலிருந்து உன்னிப்பாக கவனித்து வருகின்றேன். முதலிலேயே நான் விடுதலைப்புலிகளிடம் நான் கண்டு கொண்டது. அவர்கள் எந்தவித ஜனநாயக ஈழ தேசம் உருவாக்குவதாக எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை. எந்த விடுதலைப் போரிலும்  எவ்விதமான அரசியல் அமைப்பை உருவாக்கப் போகின்றோம்  என்று அந்தப் விடுதலைப்போராட்டக் குழுவினர் ஒரு இலக்கு வைத்திருப்பார்கள். விடுதலைப்புலிகள் ஏன் அந்த இலக்கு ஒன்றினை உருவாக்க வில்லை. அரசியல் குறித்து அவர்கள் என்ன சிந்தனை வைத்திருந்தார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால் அவர்களின் இயக்க நடவடிக்கைகளை காணும் போது சர்வதேச கிருஸ்துவ மதம் பரப்பும் குழுக்களின் ஆதிக்கத்தில் விடுதலைப்புலிகள் இருந்ததாகவே நான் காண்கின்றேன். விடுதலைப்புலிகள் ஒருகால கட்டத்தில் தமிழகத்தில் உணர்வு பூர்வமாக ஆதரிக்கப்பட்டனர். இராசீவ் கொலைக்கு பின்னர் தமிழகத்தில் அவர்கள் முற்றிலுமாக ஆதரவை இழந்தனர். விடுதலைப்புலிகள் இந்திய இராணுவத்தினை எதிர்ப்பதற்காக இலங்கை இராணுவத்துடன் கை கோர்த்தது அவர்கள் இலட்சிய நோக்கங்கள் எதுவும் கொண்டவர்கள் அல்ல என்பதை காட்டியது தமிழகத்தில் ஆதரவை இழந்த விடுதலைப்புலிகளுக்கு இங்கிலாந்து நார்வே கனடா ஆகிய நாடுகளில் இருந்த புலம் பெயர்ந்த தமிழர்களின் தார்மீக ஆதரவும் கிட்டியது. ஆனால் இதில் தான் சர்வ தேச கிறிஸ்துவ மதம் பரப்பும் குழுக்களின் ஆதிக்கம் உள்ளே நுழைந்ததாக நான் கருதுகின்றேன்.சுதந்திர ஜனநாயக தமிழ் ஈழத்திற்குபதிலாக புலிகளின் சர்வாதிகாரத்தில் உள்ள ஒரு நாட்டை உருவாக்கவே போராடினார்கள். விடுதலைப்புலிகள் அடிப்படையில் கிறிஸ்துவ தலைவர்களையும் ஹிந்துப் போராளிகளையும் கொண்டு தான் இயங்கியது. மட்டக் களப்பில் நடந்த முஸ்லீம்கள் படுகொலை பவுத்தர்கள் படுகொலை போன்றவை விடுதலைப் புலிகள் நோக்கத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவே நான் நினைக்கின்றேன். எனவே தான் கருணா பிள்ளையன் போன்ற போராளிகள் பிரிந்து சென்று இலங்கை அரசாங்கத்துடன் கைகோர்த்துக் கொண்டனர் என்று எனக்கு தோன்றுகின்றது. தமிழகத்திலும் ஈழ மக்களுக்கு ஆதரவான போராட்டங்களில் தற்போது சில கிறிஸ்துவ குழுக்கள் தான் ஈடுபடுகின்றனர். சென்னை லயோலா கல்லூரி திருச்சி வளவனார் கல்லூரி ஆகிய வற்றின் மாணவர்கள் மாணவர் போராட்டம் ஒன்றினை தொடங்க முயன்றனர். ஆனால் வெற்றி பெறவில்லை. செகத் கஸ்பார் சீமான் என்கின்ற செபாஸ்டியன் போன்ற பலரினை ப் பாருங்கள். விடுதலைப்புலிகளை கடுமையாக எதிர்த்த ஜெயலலிதாவினையும் விடுதலைப்புலிகளையும் ஒன்றாக ஆதரிப்பது என்பது நீங்கள் ஒரு மனச்சிதைவு கொண்ட மனிதர்களாக இருந்தால் மட்டுமே முடியும்.ஆனால் தமிழகத்தில் இது நடக்கின்றது. நான் ஈழப்போரினை ஆர்வமாக கவனித்து வந்தவன் தான். நடைமுறை சாத்தியமற்ற ஒரு சார்பான போராட்டம் அது. அசுர பலத்துடனும் மனித உரிமைகளைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாத இலங்கை அரசுடன் குறைவான ஆள் பலத்துடனும் ஆயுத பலத்துடனும் விடுதலைப்புலிகள் செய்த யுத்தம் அது. சமமற்ற யுத்தம் அது  இது ஒன்று தவிர விடுதலைப்புலிகளைப் பாராட்ட வேறு ஒன்றும் இல்லை. எல்லா சகபோராட்டக் குழுக்களையும் ஈவு இரக்கமற்று கொலை செய்தார்கள்.சென்னையில் வந்து விடுதலைப்புலிகளுக்கு பயந்து ஒளிந்திருந்த பத்மநாபாவை கொன்றார்கள் . பல நூறு அப்பாவித் தமிழர்களைக் கொன்றார்கள். பொதுமக்களின் ஊடாக கலந்து யுத்தம் நடத்தினார்கள்.பொது மக்களிடையே கலந்து யுத்தம் செய்ததால் தான் இந்திய அமைதிப் படை தோல்வியடைந்து வெளியேறியது. எந்த துரோகத்தினையும் செய்ய விடுதலைப்புலிகள் தயங்கியது இல்லை. மலர் மாலையுடன் வெடிகுண்டினைக் கொடுத்து அனுப்ப அவர்களால் முடியும். தேவைப் பட்டால்  இலங்கை இராணுவத்துடன் கைகோர்க்க முடியும். கழுத்திலே சயனைடு குப்பியை மாட்டிவிட்டு வாழ்வதற்கான போராட்டத்தினை நடத்தலாம் என்று சொல்ல விடுதலைப்புலிகளால் தான் முடியும். அதைப் பாராட்ட தமிழகத்திலே ஈழப்பிரச்சனையை மையமாக வைத்து வயிறு வளர்ப்பவர்களால் தான் முடியும்.  கொரில்லா இயக்கமாக விடுதலைப்புலிகள் தொடர்ந்து இருந்திருப்பார்களேயானால் இன்னும் விடுதலைப்புலிகள் வெல்ல முடியாதவர்களாக இருந்திருப்பார்கள். ஆனால் இலங்கை இனப்பிரச்சனைக்கு அதனால் தீர்வு கிடைக்காது. கொழும்பில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் சிங்களர்களுடன் கலந்து வாழ்கின்றார்கள் . வாக்குரிமை கூட இல்லாமல் அடிமைகள் போல் இலட்சக்கணக்கான இந்தியத் தமிழர்கள் இருக்கின்றார்கள். இவர்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல்  யாழ்ப்பாணம் பற்றி பேசிக் கொண்டிருப்பதில் தனி ஈழம் பற்றி பேசுவதில் பயன் இல்லை. அரசியல் இலாபத்திற்காக காங்கிரசினை குறை சொல்லலாம். வடக்கு மாகண முதலமைச்சர் விக்னேஷ்வரனை விட இலங்கையில் என்ன நடந்தது என்பதைத் தெரியாதவர் யார்? ஆகவே இலங்கை மக்களின் சூழ்நிலை புரியாமல் இங்கே அரசியல் இலாபத்திற்காக கூவுபவர்களை விட இனத் துரோகி யாரும் இருக்க முடியாது. விடுதலைப் புலிகளின் சர்வதேச கிறிஸ்துவத் தொடர்புகள் பற்றியும் அதனால் இலண்டன் நார்வே, கனடாவில் போராட்டங்கள் நடந்தது பற்றியும் தமிழக கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள்  அறிந்திருப்பதாகத் தெரிய வில்லை. விடுதலைப்புலிகளின் பிரச்சார யுக்திகள் உங்கள் கனவுக்கும் எட்டாதவை. அவற்றின் தொடர்ச்சியே போர்க்குற்ற வீடியோக்கள் இந்தியாவின் ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் வெளி வருவது. காங்கிரசினை எதிர்ப்பதன் மூலம் ஈழப்பிரச்சனையை எப்படி தீர்ப்பீர்கள் என்பதை பார்க்க நானும் ஆவலுடன் காத்திருக்கின்றேன். கடைசியாக இறந்து போன ஈழத் தமிழர்களை சிவிலியன் கேசுவாலிட்டிஸ் என்று சொன்ன ஜெயலலிதாவின் வார்த்தைகளை நான் நினைத்துப் பார்க்கின்றேன். எல்லாப் போர்களிலும் அப்பாவி மக்கள் சாகின்றார்கள். ஆனால் போரிடும் தரப்புகளை தடுத்து நிறுத்த தமிழகத்தில் போர் நடந்த சமயத்தில் எந்த ஆவேசமும் இல்லை என்பது மட்டும் உண்மை. 

No comments:

Post a Comment